Wednesday, September 13, 2006

கண்டிப்பாடா செல்லம்...தேன்கூடு போட்டிக்காக...

மு.குறிப்பு :: ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடந்த சில விஷயங்களை படம் பிடிக்க முற்பட்டதில் கதை கொஞ்சம் நீளமாகி விட்டது. படித்து விட்டு நிறை குறைகளைச் சொல்லுங்கள்



அன்று கல்லூரியின் முதல் நாள்....
அறிமுகப் படலங்கள் முடிந்து விடுதியில் வந்து படுத்தவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. காதுகளில் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது "ராதிகா ப்ரம் சென்னை ராதிகா ப்ரம் சென்னை". எத்துணை அழகாக இருந்தாள் அவள். வெளிர் மஞ்சள் நிறச் சுடிதாரில் தேவதை மாதிரியல்லவா இருந்தாள். கொஞ்சம் டூயட் பட நாயகி மீனாட்சி சேஷாத்ரி சாயல் அவளுக்கு. அவள் முகத்தில் விழுந்த முன்முடிக் கீற்றை விலக்கியபடியே சொன்னதும் சொல்லி முடிக்கும் பொழுது அவள் பூத்த புன்னகையும் அவனுக்குள் மீண்டும் மீண்டும் நிழலாடியது. "இப்படியெல்லாம் கூட அழகான பொண்ணுங்க இருப்பாங்களா?" தனக்குத் தானே இந்தக் கேள்வியை நூறாவது முறையாகக் கேட்டுக் கொண்டான். இப்படியே அவனுடைய ஆரம்ப நாட்கள் ஓடத் தொடங்கியது. விடுதி வாழ்க்கையும் களை கட்டத் தொடங்கியது. சிகெரட், தண்ணி என நித்தம் ஒரு புது அனுபவம். புதுப்புது நண்பர்கள். இத்தணைக்கும் நடுவில் அவளைப் பார்ப்பதற்காக மட்டுமே தினமும் கல்லூரி சென்று வந்தான் அவன். நாட்கள் செல்லச் செல்ல அவன் மனதின் கேள்வி மட்டும் மாறத் தொடங்கியது "இவ்ளோ அழகான பொண்ணு நமக்குக் கிடைப்பாளா?". அவனுக்கு உள்ளிருந்தே ஒரு பட்சி சொல்லியது " கண்டிப்பாடா! முயற்சி தான் பண்ணிப் பாரேன்". "பாக்கலாம் பாக்கலாம்" நினைத்துக் கொண்டான் அவன்.

இப்படியே ஆறு மாதங்கள் ஆகிப் போனது. அழகின் மூலங்களைக் கொண்டு அரைத்து செய்யப்பட்ட அவள் ஆங்கிலத்தின் மூலங்களை அரைத்து ஒரு செமினார் எடுத்ததில் கதறித் தான் போனது அந்த கங்கநாயக்கம்பட்டிக் காளை. "ஆத்தாடி என்னமா இங்கிலீபீஸ் பேசுறா, நமக்கு ஒத்து வருமா?" நினைத்த மாத்திரத்தில் பட்சி சொல்லியது "என்னடா பெரிய இங்கீலீஷ், நாலு நாள் படிச்சா உனக்கு கூடத் தான்டா வரும்". "ஆமா ஆமா" நினைத்துக் கொண்டான் அவன். நாட்களும் நகர்ந்து கொண்டே போனது. வகுப்பறைகளிலும் ஆய்வுக்கூடங்களிலும் அனுதினமும் பார்வையாலேயே காதல் பழகிக் கொண்டிருந்தான் அவன். அன்று கல்லூரி தின விழா. கலை நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கியிருந்தது. மாணவர்கள் விசிலடித்தும் இருக்கைகளின் மேல் ஏறி நடனமாடியும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். அவனும் சகாக்களோடு சேர்ந்து ரயில் ஓட்டிக் கொண்டிருந்தான். மேடைக்கு வந்த தொகுப்பாளினி கூறினாள். "அடுத்ததாக பாடல். பாட வருபவர் முதலாம் ஆண்டு கணிப்பொறியியல் துறை மாணவி ராதிகா". கேட்டவுடனே முன்னால் ஓடிப்போய் அமர்ந்து கொண்டான் அவன். மேடையில் ஏறினாள் அவள். "ஊருசனம் தூங்கிருச்சு ஊதக்காத்தும் அடிச்சிருச்சு, பாவி மனம் தூங்கலியே அதுவும் ஏனோ தெரியலியே" அதி அற்புதமாக பாடினாள் அவள். அரண்டே போனான் அவன். "ஆத்தீ! என்னென்ன தெறமையெல்லாம் இருக்கு இந்த பொண்ணுக்கு". அவன் இதை யோசித்துக் கொண்டிருக்கையிலே ஒரு நான்கு நிகழ்ச்சிகள் கடந்து போயிருக்கும். மீண்டும் வந்த தொகுப்பாளினி "அடுத்தாக நடனம், ஆட வருவது ராதிகா முதலாமாண்டு கணிப்பொறியியல் துறை" என்று கூறிவிட்டு சென்றாள். "தகஜூம் தகஜூம் ததிங்கினத்தோம் தகஜூம்" முகபாவங்களைப் பிடித்து பந்தாடிக் கொண்டிருந்தாள் அவள். ஏற்கனவே அரண்டிருந்தவன் மேலும் பதறிப் போனான். பட்சி சொல்லியது "கொஞ்சம் கஷ்டம்தான் போல". "இல்ல இல்ல பாக்கலாம்" தேற்றிக் கொண்டான் அவன்.

இப்படியே அந்த வருடம் ஓடிப்போனது. விடுமுறைக்கு வீட்டுக்கு போனவனுக்கு இருப்பே கொள்ளவில்லை. சதா அவள் நினைவிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். அவன் வீட்டு டேப்ரிக்கார்டர் நித்தம் நூறு முறையாவது ஊரு சனங்களைத் தூங்க வைத்து ஊதக்காத்தை அடித்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக இரண்டாம் வருடமும் தொடங்கியது. "இந்த வருஷம் அவகிட்ட கண்டிப்பா சொல்லிரணும்" அடிக்கடி இதையே நினைத்துக் கொண்டான். அந்த நிலையிலே அவன் தோழர்கள் கோடைக்கானல் வகுப்புச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஒருவாறாக அந்த நாளும் வந்தது. சரக்கு சரவெடி வீதம் ஓராயிரம் ஓ போட்டபடி தொடங்கியது சுற்றுலா. இரண்டு நாட்கள் சரியான ஆட்டம். மூன்றாவது நாள் காலையில் எல்லாரும் குணா குகைளுக்குச் சென்று விட அவன் மட்டும் அந்த மலைப்பாதையில் நின்று தம் அடித்துக் கொண்டிருந்தான். திரும்பிப் பார்த்தால் ராதிகா மட்டும் தனியாக வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த விநாடி சிகரெட்டைப் போட்டு அணைத்தான். அவனருகில் வந்தாள் அவள். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்லக் கேட்டான்

" என்ன ராதிகா, நீ குணா கேவ்ஸ் போலியா?". அவன் அவளிடம் பேசும் முதல் வார்த்தை. கோடைக்கானலின் குளிரையும் மீறி ஒரு உஷ்ணம் அவன் உடல் முழுதும் பரவியதை அவனால் மட்டுமே உணர முடிந்தது.

"இல்லப்பா, தல வலிக்குற மாதிரி இருக்கு, அதான்" சாதரணமாகச் சொன்னாள் அவள்.

"ஏன், என்னாச்சு?"-அவன்.

"தெரியலப்பா, அத விடு. பாக்க பாப்பா மாதிரி இருந்துட்டு தம்மெல்லாம் அடிப்பியா நீ? ஹ்ம்" .

"இல்ல, எப்பவாச்சும் தான்".

"பாத்துக்கோ உடம்புக்கு நல்லதில்ல, அவ்ளோதான்".

"ம்ம்ம்..." முதல் முறையே எத்தனை அக்கறையாக பேசுகிறாள்!! அவனுக்கு வியப்பாகத் தான் இருந்தது.

"நேத்து ஒரு ரூம்ல தங்க வச்சீங்களே, அது ரூமா? வெந்நீரே வரல. நாங்க யாருமே குளிக்கல தெரியுமா?"இது அவள்.

"பனியில் நனையா விட்டாலும் ரோஜாப்பூ அழகுதான்! குளிக்காத நீயும்" உதட்டுக்குள் முனகினான் அவன்.

"என்ன சொன்ன?"

"ஒன்னுமில்ல, ஏதோ இன்னைக்கு மட்டும் தான் குளிக்காத மாதிரி இந்த அலட்டு அலட்டுற, பொண்ணுங்கள்லாம் வாரத்துக்கு ஒரு தடவ தான் குளிப்பீங்களாமே அதான் சொன்னேன்"

"ஓய், என்ன நக்கலா. நாங்கள்லாம் ஒன்னும் அப்படி கெடையாது தெரிஞ்சுக்கோ"
அதற்குள் அனைவரும் வந்து விட பேருந்தில் ஏறி புறப்பட்டார்கள். பல நூறு முறை கிள்ளி பார்த்துக் கொண்டான் இது நினைவா என்று. சந்தோஷம் தாங்க முடியவில்லை அவனுக்கு. "எப்படிப் பேசினேன் அவளிடம். ஏதோ பேசியாச்சு இனிமே படிப்படியா கொண்டு போறதுலதான் இருக்கு." நினைத்துக் கொண்டான் அவன். அன்று இரவே கல்லூரிக்குத் திரும்பினார்கள். அது முதல் அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு புன்னகை உதிர்த்துச் சென்றாள் அவள். ஒவ்வொரு புன்னகைக்கும் ஒரு கவிதை சேமித்துக் கொண்டிருந்தான் அவன். இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க அவர்கள் துறைக்கான சிம்போசியம் விழா வந்தது. சீனியர்களிடம் கெஞ்சி அவளையும் தன்னையும் இரண்டாம் ஆண்டிற்கான கோஆர்டினேட்டர்களாய் போட்டுக் கொண்டான். நேரே அவளிடம் சென்றான்,

"ராதிகா! சிம்போசியத்துக்காக உன்னையும் என்னையும் கோஆர்டினேட்டர்ஸா போட்ருக்காங்க. அது விஷயமா உன்கிட்ட கொஞ்சம் பேசணும். உன் ஹாஸ்டல் போன் நம்பர் குடு".
"ஹாஸ்டல் நம்பர் எதுக்குப்பா? இந்தா இது என்னோட மொபைல் நம்பர் 9894917877, இதுக்கே கால் பண்ணு".
தேவையோ தேவையில்லையோ அந்த நம்பருக்கு தினமும் கால் பண்ணத் தொடங்கினான். அவன் சொல்வதெற்கெல்லாம் "அப்படியே பண்ணிடலாம்" என்பதை மட்டுமே பதிலாக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். வீட்டில் ஒரு துரும்பைக் கூட இங்கும் அங்கும் அசைக்காதவன் விழுந்து விழுந்து வேலை பார்த்தான் சிம்போசியத்துக்கு. அன்று விழாவிற்கு முதல் நாள். அவளை அலைபேசியில் அழைத்தான்

"ஹலோ, சொல்லு"

"இல்ல இன்னக்கி டெக்கரேஷன் ஆர்டிக்கிள்ஸ் வாங்கப் போகனும், நீ கெளம்பி வா"
"எதுல போறது?"

"நானான்னா பசங்ககிட்ட பைக் வாங்கிட்டு போய்டுவேன். நீயும் வர்றேல்ல, அதுனால பஸ்ல தான் போகனும்.."

"இல்ல இல்ல... நீ பைக் வாங்கிட்டு வா, நம்ம போலாம்"

"சரி அப்டின்னா பத்து நிமிஷத்துல வர்றேன், நீ கேட் பக்கத்துல வெய்ட் பண்ணு"

அலைபேசியை அணைத்து விட்டு ஆனந்தக் கூத்தாடினான். "ஆஹா என்னெனல்லாமோ நடக்குதே". அவளை வண்டியில் கூட்டிச் சென்று பொருள்களெல்லாம் வாங்கி விட்டுப் பின்னர் ஒரு ஹோட்டலுக்கு கூட்டிச் சென்றான். உணவருந்தினார்கள். கல்லூரிக்குத் திரும்பிய பிறகு விடிய விடிய டெக்கரேஷன் வேலை பார்த்தார்கள். வேலைக்கு இடையிடையாக பேசினான் பேசினான், அவன் சின்னப்பிள்ளையில் மாங்கா திருடியது முதல் இப்போ ஊர்ல நடந்த திருவிழா வரைக்கும் எல்லாம் பேசினான். அவளும் அன்யோன்யமாகவே பேசினாள். விழாவும் இனிதே நடைபெற்றது. அதற்குப் பிறகு வந்த அவளுடைய ஒவ்வொரு காலைப்பொழுது தொடங்கியதும் ஒவ்வொவொரு இரவு அடங்கியதும் அவனுடைய SMS களாலேயே தான்.அவளும் நன்றாகவே பழகினாள். ஆனாலும் அவனுக்குள் இருந்த பட்சி அவ்வப்பொழுது கேட்டுக் கொண்டுதான் இருந்தது " பேசுறதெல்லாம் சரி, ஆனா எப்படா சொல்லப் போற??". "இரு இரு இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்" அடக்கி வைத்தான். இப்படியே போய்க் கொண்டிருக்க ஒரு நாள் இரவு அலைபேசி கதறியது 'ராதிகா காலிங்'. போனை எடுத்தான்
"ஹலோ"

"ஹலோ நான் ராதிகா பேசுறேன்"

"தெரியுது, சொல்லு"

"திருட்டு ராஸ்கல்"

"ஏய்.. எதுக்குத் திட்டுற இப்போ?"

"இன்னைக்கு புது பஸ்ஸ்டான்ட்ல நின்னு தம் அடிச்சிட்ருந்தியாமே, EEE கங்கா பாத்துட்டு வந்து சொன்னா"

"போட்டுக் குடுக்குறத தவிற வேற வேலயே கெடையாதா அந்த குள்ளவாத்துக்கு?"

"அவளத்திட்டாத, நீ அடிச்சியா, இல்லையா? சொல்லு"

"சும்மா பசங்க கிட்ட ஒரு பஃப் வாங்குனேன் அவ்ளோதான்."

"பேசாதடா நீ. எத்தன தடவ சொல்றது ஒனக்கு .இனிமேல் என்கிட்ட தயவு செய்து பேசாத" இணைப்பைத் துண்டித்தாள்.
அவனுக்கு என்னவோ போல் இருந்தது. திரும்ப அழைத்தான் அவளை. எடுத்த மாத்திரத்தில்

"இனிமே உன்கூட பேச மாட்டேன்னு சொல்றேன்ல, எதுக்குடா கால் பண்ற?"

"ஸாரி! இனிமே தம் அடிக்கல, போதுமா?"

"ப்ராமிஸ்?"

"சத்தியமா!"

"சரி ஒழி! இனிமே நானும் சண்டை போட மாட்டேன், ஸாரி"

"இன்னோரு விஷயம்"

"என்ன சொல்லு?"

"எங்க அம்மாவுக்கப்புறம் ஒருத்தர் பேச்ச மதிக்கிறேன்னா அது ஒன்னோடத மட்டும்தான், தெரியுமா?"

"ஹ்ம்ம்ம், என்னவோ நல்லா இருந்தா சரி... வைக்கட்டுமா"

"ம்ம்ம்.. குட் நைட்."

"பை" .....
போனை வைத்தவனுக்கு தன் காதலை சொல்லி விட்டது போன்ற உணர்வு. "இதுல ஏதாவது புரிஞ்சிருக்குமா அவளுக்கு? பாக்கலாம்" நினைத்துக் கொண்டான்.
அந்த வார விடுமுறையிலேயே அவனை வீட்டிற்கு கூட்டிப் போய் அவள் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ராதிகா. அத்துணை அன்பானவர்களாய் அவள் பெற்றோர். அது அவனுக்குள்ளிருந்த பட்சியை மேலும் மேலும் தூண்டி விட்டது "டேய் இவள விட்ராதடா, சீக்கிரமா சொல்லு". "இரு இரு அவசரப்படாத" அவன் அத்தணையையும் கட்டுபடுத்திக் கொண்டான்.

ஒருவாறாக இரண்டாம் ஆண்டும் முடிவுக்கு வந்தது. அந்த விடுமுறையின் 24*7 ம் SMS, மிஸ்டு கால், லாங் கால். ஸார்ட் கால்னு அலைபேசியிலேயே அடங்கிப் போனது இருவருக்கும். மீண்டும் கல்லூரி தொடங்கி ஒரு வாரம் போயிருந்தது. உள்ளிருந்த பட்சி அவனைப் போட்டு துளைத்தெடுக்க ஒரு முடிவோடு அவளுக்கு கால் செய்தான். மறுமுனையில்
"ஹலோ சொல்டா"

"என்ன பண்ணிட்ருக்க?"

"இப்பதான் அப்சர்வேஷன் எழுதிட்ருக்கேன். இனி ரெக்கார்ட் எழுதனும், எதுக்குடா?"

"இல்ல, சும்மா பேசலாம்னுதான்."

"சரி சொல்லு என்ன விஷயம்?"

"இங்க ஹாஸ்டல்ல பசங்க சதா உன்னையும் என்னையும் வச்சு ஓட்டிகிட்டே இருக்காங்க, தெரியுமா?"

"அவங்க பாட்டுக்கு ஓட்டிட்டு போட்டும், நீ கண்டுக்காதடா"

"அது இல்ல ராதிகா, நான் லீவ்ல வீட்டுக்கு போயிருந்தப்போ டெய்லி உன்கூட பேசுனாலும் உன்னைய பாக்கனும் போலவே இருந்துச்சு, தெரியுமா?"

"அப்டினா ஒரு நாள் கெளம்பி வந்ருக்க வேண்டியதுதானடா?" சிறிதும் சலனமில்லாமல் பேசினாள் அவள்.

"இங்க பாரு ராதிகா, புரியாம பேசாத. இப்பல்லாம் பசங்க உன்னையும் என்னையும் வச்சு ஓட்டேல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் செல்லுக்கு வர்ற ஒவ்வொரு மெஸேஜும் ஒவ்வொரு காலும் உன்னோடதாதான் இருக்கணும்னு தோணுது. இதெல்லாம் ஏன்னே எனக்கு தெரியல. இதுக்கு பேருதான் காதல்னா, சத்தியமா சொல்றேன், நா உன்ன லவ் பண்றேன்"

"திருட்டுநாயே, உன்னையப் போய் ஃப்ரெண்டுனு நெனச்சேன் பாரு, என்னைய சொல்லனும்." அழுகை பீறிட்டது அவளுக்கு.

"ராதிகா... ராதிகா..."

"இனிமே ஜென்மத்துக்கும் என்கிட்ட பேசாத, உன்னையெல்லாம் நம்புனது என் தப்பு, வச்சிரு" செல்லை ஆஃப் பண்ணி விட்டாள் அவள். எவ்வளவோ முயற்சித்தும் அவளிடம் பேச முடியவில்லை. ஒரு வாரம் கழித்துத் தான் கல்லுரிக்கு வந்தாள். பேச முனைந்தவனை "ஓடிப்போயிரு" என்று நாயை விட கேவலமாக அடித்து துரத்தினாள். அதுவரை ஒரு நாளைக்கு 1 2 என்று புகைத்துக் கொண்டிருந்தவன் 5 பாக்கெட் சிகரெட் அடிக்கத் தொடங்கினான். வாரத்தில் 5 நாட்கள் தண்ணி அடிக்கத் தொடங்கினான். அதுவரை 80%க்கு குறையாமல் எடுத்து வந்தவன் அந்த செமஸ்டரின் அனைத்து பாடங்களிலும் கோட்டை விட்டான். ஆனால் அதிலிருந்து மீண்டு வர அவனுக்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை. சில நண்பர்களின் உதவியோடும் ஆறுதலோடும் விரைவில் வெளியே வந்தான். அவனை ஆறுதல் படுத்துவதற்காக அவன் நண்பர்கள் சிலர் ராதிகாவை பொழுதுக்கும் வசைபாடிக் கொண்டிருந்தனர் "மச்சி அவள்லாம் ஒரு பொண்ணாடா? அழகாயிருக்கோம்ன்ற திமிருடா. உன்னைய நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாளே, நாசமாத்தான்டா போவா" ஆனால் யார் என்ன சொன்னாலும் அவனுக்கு ஒருபொழுதும் அவள் மேல் கோபம் வரவேயில்லை. ஆனால் சூறாவளி மாதிரி படித்து அடுத்த செமஸ்டரிலேயே அத்தனை அரியர்களையும் தூக்கினான்.

நான்காம் ஆண்டும் துவங்கியது. மாணவர்கள் ஆப்டிட்யூடையும் ஆங்கிலத்தையும் துரத்தி ஓடிக் கொண்டிருந்தார்கள். ப்ளேஸ்மன்ட்டும் ஆரம்பமானது. ராதிகாவின் அழகையும் அறிவையும் அவளையும் சேர்த்து அள்ளிக் கொண்டு போனது கீகூள் பன்னாட்டு நிறுவனம். அவனுக்கும் அவன் அட்டென்ட் பண்ணிய எட்டாவது கம்பெனியான டி.ஃ.ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நண்பர்களைப் பிரியும் சோகம், ஆட்டோகிராப் நோட்டுகள், ஏப்ரல் மாதத்தில் மாதிரி நண்பர்கள் வீடுகளுக்கு டூர், இதற்கிடையிலே காசு கொடுத்து வாங்கிய டப்பா ப்ராஜக்ட் என்று முடிவை நெருங்கியிருந்தது அந்த ஆண்டு. "மச்சான்களா பிரிய போறோமேடா" என்று சோகத்தை சாக்காக வைத்து கடைசி முப்பது நாளும் தினமும் தண்ணி அடித்ததில் போதையோடு போதையாக ஓடிமுடிந்தது அவ்ன் கல்லூரி வாழ்க்கை . இரண்டு மாத ஓய்விற்குப் பின் வேலையில் சேர்ந்தான் அவன். ட்ரெயினிங் முடித்து விட்டு அவன் பண்ணிய முதல் ப்ராஜக்ட்டே அமெரிக்க உயர் அலுவகத்திலிருந்து பாராட்டுக் கடிதம் பெற்றது. வேலையில் சேர்ந்து ஆறு மாதங்களிலேயே முதல் ஆன்சைட் வாய்ப்பு. அமெரிக்கா சென்று திரும்பியவுடனே பதவி உயர்வு என்று இரண்டு ஆண்டுகளிலேயே ஆறு இலக்கச் சம்பளம் எட்டியிருந்தான் அவன். இத்தனைக்கிடையிலும் "ச்சே எவ்ளோ நல்ல பொண்ணு, நாமதான் லூசுத்தனம் பண்ணிட்டோம், ஹ்ம்ம் " என்று அவ்வப்பொழுது ராதிகவைப் பற்றி நினைத்துக் கொள்வான் .

ஒரு ஞாயித்துக்கிழமை மாலை கிழக்கு கடற்கரைச் சாலையின் ஒரு ரிசார்ட்டில் அலுவலகத் தோழி ஒருத்தியோடு பீர் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அலைபேசி சிணுங்கியது "ரவி காலிங்". "எக்ஸ்கியூஸ்மீ டியர், கால் அட்டென்ட் பண்ணீட்டு வந்துர்றேன்" அவளிடம் விடை பெற்று விட்டுட்க் கொஞ்சம் தள்ளி வந்து எடுத்தான்.

"ஹலோ ரவி,எப்படி மாமா இருக்க?"

"அதெல்லாம் விடு மச்சி, ஒரு சந்தோஷமான விஷயம் தெரியுமா?"

"என்ன மாமா சொல்ல்லு?" "காலேஜ்ல உன்னைய ஏமாத்திட்டுப் போனாளே ராதிகா, அவ இப்ப அப்பல்லோல அட்மிட் ஆயிருக்காளாம் மச்சி"

"எதுக்கு மாமா? என்ன விஷயம்னு தெரியுமா?"

"நம்ம கூட படிச்சாளே குண்டு லதா, அவள நேத்து பாத்தேன் நங்கநல்லூர் கோயில்ல வச்சு. அவதான் சொன்னா. ஏதோ சீரியஸ் கேஸ் மதிரிதான் தெரியுது"

"அச்சச்சோ, ரவி நாம வேனும்னா போய் பாக்கலாமாடா?"

"என்னடா மச்சி சொல்ற? உன்னைய எவ்ளோ கேவலப்படுத்துனா, அவளுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். போய் இதக் கொண்டாடுற வழியப் பாப்பியா? போடா, சரி நான் வைக்கிறேன் மச்சி, அப்புறமா பேசுறேன், பை"

"ஹ்ம்ம், பை மாமா". அவனுக்கு ஏதோ மாதிரி இருந்தது. அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. அவன் கூட வந்தவளை தேடிப் பார்த்தான். அவள் போதையின் உச்சத்தில் யாருடனோ நடனமாடிக் கொண்டிருந்தாள். "சரி அவளா வந்துக்குவா" நினைத்தபடியே காரைக் கிளப்பிக் கொண்டு வீட்டிற்குப் போனான். படுத்தாலும் உறக்கம் பிடிக்கவில்லை. எழுந்து உட்கார்ந்தான். ஒன்று, இரண்டு.... இருபது சிகெரட்டுகள் முடிந்தது. கடிகாரம் நாலரை மணியைக் காட்டியது. முடிவோடு போய் குளித்துக் கிளம்பினான். நேரே அவன் கார் அப்பல்லோ மருத்துவமனையின் பார்க்கிங்கில் போய் நின்றது. ரிஷப்சனில் போய்க் கேட்டான்

"ராதிகானு 24 வயசுப் பொண்ணு, அட்மிட் ஆகியிருக்காங்க, கொஞ்சம் எந்த வார்ட்னு சொல்ல முடியுமா?"

அங்கிருந்தவள் கம்ப்யூட்டரை தட்டிப் பார்த்து கூறினாள் "மூணாவது மாடில ரூம் நம்பர் 309"

"என்ன கேஸ்?"

"ட்ரக் கேஸ்"

"தேங்கஸ்" சொல்லி விட்டு லிப்டைப் பிடித்து மேலே போனான். 309ம் அறையின் வாசலில் அமர்ந்திருந்தார் அந்தப் பெரியவர். அவரைப் பார்த்தவுடனே அடையாளம் தெரிந்தது அவனுக்கு. அவர் ராதிகாவின் அப்பா. நேரே போனான்

"ஹலோ அங்கிள்"

"யாருப்பா நீ?"

"அங்கிள் நா ராதிகாவோட க்ளாஸ்மேட், காலேஜ்ல இருக்கும் போது கூட ஒரு தடவ உங்க வீட்டுக்கு வந்துருக்கேன் ஞாபகம் இருக்கா?"

நினைவுக்கு வந்தவராய் "ஆமா தம்பி. ஞாபகம் இருக்கு, நல்லா இருக்கீங்களா?"

"ம்ம்ம், அங்கிள் ராதிகாவுக்கு என்ன ஆச்சு?"

"அத ஏன் தம்பி கேக்குறீங்க? சிக்ஸ் மன்த்ஸ் முன்னாடி யு.எஸ் போனா கம்பெனி விஷயமா. அங்க யாரோ ஒரு ராஸ்கல் இவளுக்கு கோக்கேன்னு ஒரு போதப்பழக்கத்த கத்து குடுத்ருக்கான். இவளும் அதுல ரொம்பவே அடிக்ட் ஆயிட்டா. முணே மாசத்துல உடம்பெல்லாம் வெளிரி உருக்குலஞ்சு போச்சு. அப்புறம் அங்க கம்பெனில இருந்த ஒருத்தர் தான் எங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டு அவள கம்பெல் பண்ணி இந்தியாக்கு அனுப்புனார். ஏர்போர்ட் போய் பாத்தா எங்களுக்கே அடையாளம் தெரியாத மாதிரி சீரழிஞ்சு போயிருந்தா தம்பி, யாருக்கும் சின்ன கெடுதல் கூட நெனக்க மாட்டா, அவளுக்கு போய் இப்படி" சொல்லும் போதே அழுகை முட்டிக் கொண்டு வந்தது அவருக்கு.

"அங்கிள் அழாதிங்க, எல்லாம் சரியாயிடும், சீக்கிரமே, ப்ளீஸ் அங்கிள் அழாதிங்க" தேற்ற முயற்சித்தான் அவன். அழுகையை அடக்கியவராய்
"அப்புறம் இங்க வந்ததுக்கப்புறம் அவளால அந்த கோக்கேன் இல்லாம் இருக்கவே முடியல. போன வாரம் 20 தூக்க மாத்திரைய போட்டு சூசயிட் அட்டெம்ட் பண்ணீட்டா தம்பி. அப்புறம் தான் இங்க கொண்டு வந்து சேத்தோம். இப்போ ட்ரீட்மன்ட்ல கொஞ்சம் பரவாயில்ல, கொஞ்சம் கொஞ்சமா அந்த சனியன மறந்துட்டு வர்றா" விசும்பியபடியே சொல்லி முடித்தார் அவர்.

"ச்சே! ராதிகா காலேஜ்ல இருக்கும் போது எவ்ளோ தெளிவா தைரியமா இருப்பா, அவளா இப்படி பண்ணா? நம்பவே முடியல அங்கிள்"

"என்ன பண்றது, எல்லாம் தலையெழுத்து, கடவுள் புண்ணியத்துல அவ சுகமாயி வந்தானா எங்களுக்கு அதுவே போதும், கல்யாணம் பண்ணிப் பாக்குற ஆசையெல்லாம் கூட எங்களுக்கு இல்ல"

"அங்கிள் நா போய் அவளப் பாக்கலாமா?"

"போய்ப் பாருங்க தம்பி, போங்க".
அந்த அறைக்குள் நுழைந்தான். கசங்கிப் போன மல்லிகைச்சரம் மாதிரி கட்டிலில் கிடந்தாள் ராதிகா. கன்னமெல்லாம் ஒடுங்கிப் போய் எழும்பும் தோலுமாக இருந்தாள். முடியெல்லாம் கூட கொட்டிப் போயிருந்தது. அவன் கண்ணை அவனாலேயே நம்ப முடியவில்லை. "அந்த ராதிகாவா இது? எவ்ளோ அழகாயிருப்பா" அவளை முதன்முதலாகப் பார்த்தபோது இருந்த முகம் அவனுக்குள் வந்து போனது. மெல்ல அவள் தலையில் கை வைத்து வருடினான். கண்விழித்துப் பார்த்தாள் அவள். ஏய் நீயா? எனபது போலிருந்தது அந்தப் பார்வை.

"நீ தூங்குடா தூங்கு" என்றான் அவன். அவள் கண்களில் இருந்து சாரை சாரையாக கண்ணீர் வழிந்தது.

சன்னமாகக் கேட்டாள் "எப்ப வந்த?"

"இப்பதான். ஏன்டா இப்படி பண்ண?" என்றான் அவன்.

"என்னவோ அறிவக் கடன் கொடுத்துட்டேன், என்னனு சொல்றது? யேய் நா உன்னைய எவ்ளோ பாடா படுத்துனேன். உனக்கு கொஞ்சங்கூட கோபம் இல்லையாடா?"

"அதெல்லாம் இப்ப எதுக்கு? சத்தியமா எனக்கு எந்த கோபமும் இல்ல. நாந்தான் பைத்தியக்காரத்தனமா நடந்துகிட்டேன், ஸாரிடா".
கதறி விட்டாள் அவள்.அவனிடத்தில் கேட்க வேண்டும் போலிருந்தது
"டேய்! லைப்ல எனக்கு ஒரு லிப்ட் கொடுப்பியடா, ப்ளீஸ்". ஆனால் அவளுக்கு வார்த்தைகளுக்குப் பதிலாக கண்ணீர்தான் வந்தது. அவள் தலையை வருடியபடியே சொன்னான் அவன் "கண்டிப்பாடா செல்லம்".

சர்தார்ஜி ஜோக் ஒன்று....

கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? தலைப்பை பார்த்தவுடனே எனக்குத் தோன்றிய சர்தார்ஜி ஜோக் ஒன்று.

மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?"

Friday, August 25, 2006

கல்லூரி கலாட்டா...... இது ஒரு கதையா???

ஹ்ஹா ஹ்ஹா ஹா...... அந்தக் கல்லூரி வளாகத்தின் மையப்பகுதியில் பலமாக சிரிப்பொலி கேட்டுக் கொண்டிருந்தது. அவனும் அவன் கூட்டாளிகளும் இருக்கும் இடத்தில் சிரிப்பொலிக்கு ஒருபொழுதும் பஞ்சம் இருக்காது. எப்பொழுதுமே ஏதாவாது ஒரு விஷயம் அவர்களிடம் சிக்கி சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும். அப்படி அவர்களிடம் தாறுமாறாக சிக்கி கொள்பவர்களில் பொதுவானவர்கள் அந்தக் கல்லூரியின் கடலை சாகுபடியாளர்களும் பெண்களின் துப்பட்டாவையே சுற்றி வரும் மாணாக்கரும் தான். அதிலும் அவன் இருக்கிறானே, 'எமகாதகன்'. அவன் கண்முன்னே நடந்த கடலை சமாச்சாரங்களையும் பெண்களிடம் ஆண்கள் வழிந்து நின்ற நிகழ்வுகளையும் மிகைப்படுத்தி பத்து மடங்காக்கி அந்தப் பையன்களை கதறக் கதறக் கேவலப்படுத்துவதில் கைதேர்ந்த கில்லாடி.

சரி... சரி... அவன் அவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அவனைப் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோமா? அவன் அந்தக் கல்லூரியில் அனைவருக்குமே பரிச்சயமானவன். ஏகப்பட்ட நண்பர்கள் அவனுக்கு. அவனுடைய நண்பர்கள் வட்டத்தில் உள்ள அனைவரின் மேலும் அதீத பற்றும், நம்பிக்கையும், ம்ரியாதையும் கொண்டவன் அவன். கல்லூரி மாணவர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் முதன்மையானவை தம் அடிப்பதும், தண்ணி அடிப்பதும் தான் என்பதில் அதீத நம்பிக்கை கொண்டு செயல்பட்டு வருபவன்.

"தம் அடிக்கிறதுலாம் தப்புடா, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இப்படி தான் சிகெரெட் குடிச்சுட்டே இருப்பார், 40 வயசுலயே கேன்சர் வந்து மேலே போய்ட்டார், தெரியுமா" இப்படி அட்வைஸ் செய்கிறவர்களிடமெல்லாம் "எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார் 95 வயசுல, இன்னைக்கும் ஒரு நாளைக்கு 3 பாக்கெட் சுருட்டு பிடிக்கிறார்" என்று புகையை விட்டத்தை நோக்கி விட்டபடியே தர்க்கம் செய்பவன் அவன். எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்கும் நபர்களிடம் ஒருபொழுதும் பேசவே மாட்டான். அதற்காக அவனை படிப்பில் சோடை என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள். ஆனால் அவன் பள்ளிக்காலங்களில் படித்ததை விட இப்போது கொஞ்சம் சுமாராகத்தான் படிக்கிறான். படிப்பைத் தவிர இன்ன சில திறமைகளும் அவனுக்கு உண்டு. அதெல்லாம் இந்தக் கதைக்கு தேவை இல்லை என்பதால் விட்டு விடுவோம்.

கல்லூரி விழாக்களில் அவன் குழுவினர் போடும் நாடகங்களின் கதைகள் எல்லாமே கடலை போட்டதால் பையன்கள் அரியர்ஸ் வாங்கி நிற்பதாகவும், காதலி ஏமாற்றியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பையன்களைப் பற்றியதாகவுமே இருக்கும். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்குமே, அந்தக் கல்லூரியின் கடலை சாகுபடியாளர்களுக்கும் அத்துணைப் பெண்களுக்கும் முதல் எதிரி 'அவன்' 'அவன்' 'அவன்'. சரி கதைக்கு வருவோம்.

அவனும் அவன் கூட்டாளிகளும்தான் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் அங்கே. அந்த வழியாக வந்து கொண்டிருந்தான் கோபு. அவனுக்கு நேரெதிர்மாரானவன். அந்தக் கல்லூரியில் படிக்கும் அனைத்துப் பட்டத்து இளவரசிகளுக்கும் கோபு தான் பாதுகாவலன். அவர்கள் காலையில் கேன்டீனுக்கு செல்வது முதல் மாலை விடுதிக்கு செல்வது வரை கூட இருந்து கூளக்கும்பிடு போடுவது தான் கோபுவுடைய தலையாய வேலை. அவன் அழைத்தான் "டேய் மச்சான் கோபு வாடா".கோபுவைப் பார்த்தவுடனே அவன் கூட்டாளிகளின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி சரி ஒருத்தன் சிக்கிட்டான்டானு. அவன் கூட்டத்தைப் பார்த்தவுடனேயே கோபுவுக்கு வெலவெலத்தது, இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்

"என்ன மச்சான் இங்க இருக்கீங்க???" என்றான்.

"ஒன்னுமில்ல சும்மாதான். நீ ஒக்காரு" இது அவன்.

ஹ்ம்ம்ம் என்றான் கோபு.

"சரி கோபு எப்பவுமே எவ கூடனாச்சும் வறுக்குறதுக்குனே கைல ஒரு சட்டி வச்சிருப்பியே, எங்க காணோம்" - இது அவன்.

"என்ன மச்சான்" என்று காதில் விழாதவன் போல் கேட்டான் கோபு.

"வாட் எ பிட்டி, வாட் எ பிட்டி கோபு கைல ஓட்ட சட்டி" என்று அவன் சகாக்களுள் ஒருவன் குரல் கொடுக்க கோபு முகத்தில் ஒரு அசட்டு வழிசல் புன்னகை.

"சரிடா கோபு அந்த சிவில் மகாலிங்கம் உன்கூடவே ஒரு வாரமா சுத்துறானே, என்ன விஷயம்?"-இது அவன்

"அவன் உங்க டிப்பார்ட்மென்ட் லதாவ லவ் பண்றான் மச்சான், அவ எனக்கு ப்ரெண்ட்ல, அதான் ப்ரொப்போஸ் பண்றதுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி" என்றான் கோபு.

"அவனே ஒரு எடுப்பு, இதுல நீ அவனுக்கு துடுப்பா?" - அவன்.

"உங்களுக்கு விருப்பம் இல்லேனா நான் அவனுக்கு ஹெல்ப் பண்ணல மச்சான், போதுமா" என்றான் கோபு.

"அவன் லதாவ லவ் பண்ணட்டும், இல்லேனா அவங்க அம்மாவக் கூட லவ் பண்ணட்டும், எங்களுக்கு என்னடா வந்துச்சு" - அவன்

முகத்தில் மீண்டும் ஒரு அசட்டுப் புன்னகையை வழிய விட்டான் கோபு.

"டேய் வறுக்குறது தான் வறுக்குறீங்க, கொஞ்சம் அளவா வறுங்கடா. பாரு காலேஜ் பூராவும் எவ்ளோ கருகுன வாடை அடிக்குதுனு. அடிக்கிற வெயில விட உங்க சட்டில இருந்து வர்ற அனல்தான்டா அதிகமா இருக்கு" என்றான் அவன் சகாக்களுள் ஒருவன்.

"சரி மச்சான் நான் கெளம்பட்டுமா" என்றான் கோபு வழிந்தவாறே.

"போ... போ... அந்த 3rd year ஈஸ்வரி இப்பதான் லைப்ரரி பக்கம் போனா, போ போய் சட்டிய ரெடி பண்ணு"என்றான் அவன்.

ஓடியே போய்விட்டான் கோபு. மீண்டும் அவர்கள் அரட்டையைத் தொடர்ந்தார்கள். கொஞ்ச நேரம் கழித்து வாயில் சிகெரெட்டைப் பற்ற வைத்தவாறே தலைதிரும்பிப் பார்த்தான் அவன்.

லைப்ரரி வாசலில்.... ஈஸ்வரி கையிலிருந்த புத்தகங்களைப் பிடுங்குவதும் கொடுப்பதுமாய் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தான் கோபு.

அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.


பி.கு::ஆனால் அந்த 'அவனே' ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு காதல் இவ்வளவு அழகானதா!!! என்று வியந்து கவிதைகள் எல்லாம் எழுதியது சுவாரசியமான தனிக்கதை...


மேலும் அவனுடைய கல்லூரிக்கால கலாட்டாக்கள் தொடர்வது உங்களுடைய அன்பான பின்னூட்டங்களைப் பொறுத்ததே

Thursday, August 24, 2006

உனக்காகத் தானே...

உனக்காகத் தானே !!!

விட்டுக் கொடுத்தேன்....

எனது புகைப் பழக்கத்தை....

எனது புரட்சி சிந்தனைகளை....

பல தோழிகளை.....

சில தோழர்களை....

அட இத்தனை எதற்கடி???

உன்னை விட்டுக்கொடுத்தது கூட

உனக்காகத் தானே !!!

Sunday, August 13, 2006

அந்த நாள் ஞாபகம்......

நான் எனது பள்ளிப்பருவத்து நினைவுகளை அசை போடுவதற்காக கடந்த சனிக்கிழமை எனது பள்ளிக்குச் சென்றேன்... சில்லென வீசிய வேப்பங் குளிர்க்காற்றில் பின்னோக்கி விரிந்த எனது நினைவுகளின் சில துளிகள் இங்கே... இதே நினைவுகள் அரசு ஆண்கள் பள்ளிகளில் படித்த பலருக்கும் இருக்கும் என்றே எண்ணுகிறேன்...

தூய யோவான் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை...
காலத்தால் காக்கப்பட்டு வரும் அரும்பெரும் பொக்கிஷம். என்னைப் போன்றே பலரையும் உருவாக்கி உருவப்படுத்தியிருப்பதில் 160 ஆண்டுகளைக் கடந்து விட்ட அந்தக் கல்விக்கூடம் ஒரு அன்னைக்கூடமாய் மாறியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அந்த நாட்களிலே....

9 மணி பள்ளிக்கு காலை 8 மணிக்கே தொடங்கி விடும் சைக்கிள் பயணம்,ஏழெட்டு நண்பர்களாய் கதைத்துக் கொண்டு அழுத்தி வரும் அந்த பயணம், எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இன்று கிடைக்கத அந்த பயணம்....

வாசலில் வந்து பேன்ட்டு களைந்து அரைக்கால் ட்ரவுசரோடு உள்ளே வந்த அந்த நாட்கள்....

ஸ்௯ல் அட்டேன்ஷன் தொடங்கி "சருவலோகதிபா நமஷ்காரம்" வழியாக "ஜண கண மண" பாடிய கூட்டுப்பிரார்த்தனைகள்...

"அக்கா!!!! ஒரு ரூபாய்க்கு மாங்கா குடுங்க", "அண்ணே 50 காசு ஜூஸ் ஒன்னு 1 ரூபா ஜூஸ் ஒன்னு", "பாண்டியன் ஒரு மேங்கோ ஐஸ்" என்று வாங்கித்தின்ற இடைவேளைப் பொழுதுகள்...

10 பேர், 15 பேர் கூடிப் பகிர்ந்து பேசி சிரித்து சம்சாக்களோடும் வடைகளோடும் உணவு உண்டுக் களித்த புளியமரத்தடி நிழல்......

ஒரு பாடத்தில் பெயில் ஆனால் ஒரு அடி வீதம் ஆளுக்குத் தகுந்தாற் போல் வாங்கிய அடிகள்....

சட்டை கழற்றி உள் பனியனோடு கூட உலா வந்த விளையாட்டுப் பாடவேளைகள்.... அதிலே விளையாடிய
ஏழுகற்கள், எறிப்பந்துகள்...

போட்டுக் காட்டிய நாடகங்கள், பேசிப் பழகிய மேடைகள், எழுதிய கவிதைகள்... அதிலே வென்று குவித்த பரிசுகள்...

அதிகாலை நேரத்திலே 5 மணிக்கு லாம் வந்து கலந்து கொண்ட NCC பரேடுகள்....(இப்பல்லாம் நெனச்சாக் கூட 12 மணிக்கு முன்னாடி எந்திரிக்க முடியல)

"உள்ள மட்டும் நானே உசிரக் கூடத்தானே நண்பண் கேட்டா வாங்கிக்கோன்னு சொல்லுவேன்" என்று பாடித்திரிந்த நட்பு வட்டங்கள்...

கோயில்மணி சாரிடம் டியூஷன் என்று சொல்லி தண்ணீர் டேங்கிற்கு பின்னால் நின்று "மாப்ளே இவ லட்டு; இவ ஜாங்கிரி; " என்று அடித்த சைட்டுகள்....

சொட்டை என்றும் வழுக்கை என்றும் குண்டன் என்றும் காட்டான் என்றும் வாத்தியார்களுக்கு இட்ட புனைப் பெயர்கள்... அவர்களைப் போலவே பேசிக்காட்டி நடித்துக்காட்டி மகிழ்ந்திட்ட கணங்கள்.......

வருடத்திற்கு ஏழு நாட்கள் நடக்கும் ஐ.எம்.எஸ். விற்பனைத் திருவிழா.... அவற்றில் நாம் கொடுத்த சின்ன சின்ன பங்களிப்புகள்......

இன்னும் எத்தனையோ பசுமையான, செழுமையான, ஆத்மார்த்தமான நினைவுகள் நம் பள்ளிப்பருவத்து நாட்களிளே....ஆனால் இன்று
என் பள்ளித்தோழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பரிமாணத்தில்...
சிலர் மருத்துவர்களாய்... சிலர் வழக்குரைங்கர்களாய்... பலர் பொறியாளர்களய்...

ஆனால் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு ஓரத்திலாவது இந்த நினைவுகள் புதைந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மையே........

Sunday, August 06, 2006

கடைசி ஆசை..... எனது கன்னி சிறுகதை முயற்சி......

கடைசி ஆசை.......

மரத்தின் மீது சாய்ந்தபடி வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் சசி. நெருங்கி வந்த உயர்ந்த மனிதன் சசியின் தோளில் கை வைத்துக் கேட்டான்,

என்ன சசி இங்க நின்னுட்டு இருக்கீங்க??

சும்மாதான் சார், சரி ஆரம்பிக்க எவ்வளவு நேரம் சார் ஆகும்??

ஒரு அரை மணி நேரம் ஆகும்னு நெனக்கிறேன் சசி, ம்ம்ம்ம்.... சரி உங்க கடைசி ஆசை என்ன சசி? என்ன கேக்க போறீங்க???

அதான் சார் யோசிச்சிட்டுருக்கேன் .... என் அனன்யாவுக்காக தான் எதாவது கேக்கனும்.....

உங்க கடைசி ஆசை ௯ட அவங்களுக்காக தானா???

ஆமா சார், என் வாழ்க்கை, எண்ணங்கள் எல்லாமே அவதான் சார்.இந்த உலகத்துல என்னைய முழுசா புரிஞ்சுகிட்ட ஒரே ஜீவன்னா அது அவ மட்டும் தான் சார். அதுனால என்னோட கடைசி ஆசை ௯ட அவளுக்காக தான்.

சசி, உங்கள நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. உங்கள மாதிரி ஒருத்தர் கெடச்சதுக்கு அவங்க ரொம்பவே குடுத்து வச்சிருக்கணும்........

புன்னகைத்தான் சசி... பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அந்த தடித்தவர் வந்து சொன்னார் " சார் எல்லாம் ரெடி ஆயிருச்சு"

அப்படியா, மேடை ரெடி ஆயிருச்சா???

ஆமா சார் ரெடி ஆயிருச்சு

ம்ம்..... வாங்க சசி போகலாம்.
மூவரும் நடக்கத் தொடங்கினார்கள்.......
.
.
.
.
.
ஸ்டார்ட் கேமரா,.. ஆக்ஷ்சன்.....

அந்த உயர்ந்த மனிதன் பேச தொடங்கினான் " Welcome Back Viewers, This is Prajin from kalakkal TV's "ஆசைப்படுங்கள் ஆணையிடுங்கள்". வழக்கம் போல இந்த வாரமும் ஒரு அதிர்ஷ்டசாலி நேயர தேர்ந்தெடுத்து அவரோட எட்டு ஆசைகள நிறைவேற்றி வைக்கிறோம்.. அந்த வகைல இந்த வார அதிர்ஷ்ட்சாலி நேயர் சசி American Teddy Bear la தொடங்கி அவரோட முதல் ஏழு ஆசைகளையும் அவரோட காதல் மனைவி அனன்யாவுக்காக கேட்ருக்கார். இப்போ அவரோட எட்டாவது ஆசை,

சொல்லுங்க சசி இந்த நிகழ்ச்சிக்கான உங்களோட கடைசி ஆசை என்ன??

வெட்க்கப்பட்டுக் கொண்டே கேட்டான் சசி "என்னோட அனன்யாவோட எடைக்கு எடையா அவளுக்கு பிடிச்ச Cadburys Diarymilk வேணும் சார்"....


புன்னகை தவழ அந்த பிரம்மாண்ட தராசில் அமர்ந்து கொண்டிருந்தாள் அனன்யா.....

Sunday, July 02, 2006

கவிதைத்தோழியே........



















ஏய்..... உன்னவள் உனக்கானவளாய் ஆகி விட்ட பிறகு என்னை மறந்து விட்டாயே என்று சிணுங்கிய என் கவிதைத்தோழிக்காக....



ஏ கவிதைத்தோழியே........

சாமனியனாய் இருந்த என்னை கவிஞன் ஆக்கியது அவள்.....

அவள் கடைக்கண் பார்வை என்னை கடந்த பொழுது என் உணர்வுகளில் ஊறியவள் நீ...

அவள் இதழ்கள் என்னைப் பார்த்து புன்னகைத்த பொழுது என் உயிருக்குள் ஊற்றெடுத்தவள் நீ.....

அவள் நினைவுகளே உன் சாராம்சம்......

அவள் சிரிப்பு உந்தன் நயம்.......

அவள் இயல்பே உந்தன் உவமைப்பொருள்......

அவள் மூச்சுக்காற்று என்னை தீண்டும் நேரத்தில் என் சுவாசக்காற்றாய் வெளிவர இருப்பவள் நீ.....

அவள் என் காதலி.... ஆனால் நீயல்லவா அவளுடைய காதலி???

உனக்கும் எனக்குமான உறவுக்கு உயிர் கொடுப்பவள் அவள்......

எனவே என் கவிதையே என்னவளின் பால் ஒருபோதும் கோபம் கொள்ளாதே.........

Friday, June 30, 2006

கண்ணீர் துடைக்க.....


என்னவளே!!!

என் மரண ஊர்வலத்தில் வந்து ஒருபொழுதும் அழுது விடாதே

என்னையும் அறியாமல் என் கைகள் நீண்டு வந்து விடும் உன் கண்ணீரை துடைப்பதற்கு..........

இதயத்தில் ஒரு உறக்கம்...


இதயத்தில் ஒரு உறக்கம்........

ஒருவர் ஒரு அறையில் தான் உறங்க முடியும் இந்த நிஜ உலகத்தில்...........

என்னவளோ நான்கு அறைகளில் உறங்கி கொண்டு இருக்கிறாள்..

என் இதயமெனும் நிழல் உலகத்தில்....

காதல் உலகம்.......


காதல் உலகம்.......

இந்த பிரபஞ்சத்தின் அளவாய் என்னை விரிவாக்க முற்பட்டுக் கிடந்தேன்........ இப்பொழுது எனது அளவுக்காய் இந்த பிரபஞ்சத்தை சுருக்க முயற்சிக்கின்றேன்.........

ஆம்......... எனக்குள் அவள்........ காதலுக்குள் நான்.........

உரையாடல்......


உரையாடல்......

நீ ஒரு தேவதை என்றேன்.......

எனக்குத்தான் சிறகுகள் இல்லையே என்றாய்.......

நான் சிரித்தேன்......

நீ ஒரு நிலவு என்றேன்......

மாதத்தில் பாதி நாட்கள் தேய்ந்து போவேன் என்றாய்....

நான் சிரித்தேன்......

நீ ஒரு கவிதை என்றேன்......

எனக்கு அடி சீர் விருத்தமெல்லாம் ஒத்து வராது என்றாய்.....

நான் சிரித்தேன்......

நீ என் காதலி என்றேன்.........

என்ன உளறுகிறாய் என்று கேட்டு விட்டு.... நீ சிரித்தாய்........

நான் சிதறினேன்....